ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிக் காசோலைகளும் கல்வி உதவித் தொகைகளும் வழங்கல் | 01 ஜூலை 2026
ஜனாதிபதி நிதியத்தின் நடவடிக்கைகளை பிரதேச மட்டம் வரை பன்முகப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஊடாக மருத்துவ சிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்ட 4 மற்றும் 5 ஆம் பயனாளிகளுக்கான நிதியுதவிகள் 01 ஜூலை 2026 அன்று வழங்கப்பட்டன.
இதன்படி கே. சந்தரதாச அவர்களுக்கு ரூ.2,50,000 பெறுமதியான காசோலையும், ஏ. இஷ்ஹாக் அவர்களுக்கு ரூ.3,00,000 பெறுமதியான காசோலையும் வழங்கப்பட்டன. பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாரக், உதவி பிரதேச செயலாளர் ஏ. ஜுமானா ஹஸீன் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. நஜீம் ஆகியோர் காசோலைகளை பயனாளிகளிடம் கையளித்தனர்.
மேலும், சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் கல்வி உதவித் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளுக்கும் தகுதி பெற்ற ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.30,000 வீதம் கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன.
சமுர்த்தி திணைக்களத்தின் பல்வேறு நலத்திட்டங்கள் பயனாளிகளிடம் கையளிப்பு
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிறைந்துறைச்சேனை மற்றும் தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவுகளில் "ரன்விமன" வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.10 இலட்சம் நிதியுதவியில் 2 புதிய வீடுகள் கையளிக்கப்பட்டன. சமுர்த்தி கொடி தினம் – 2023 நிதி மூலம் 12 வறிய குடும்ப மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், 14 பாடசாலைகளுக்கு மொத்தம் 42 குப்பைத் தொட்டிகளும் வழங்கப்பட்டன. சமுர்த்தி வங்கி மூலம் "ரன்பத" மற்றும் "சவிபல" கடன் திட்டங்களின் கீழ் தலா 2 பயனாளிகளுக்கு கடனுதவிகளும், பொருளாதார வசதி குறைந்த 10 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எம்.ஏ.சி. நியாஸ்தீன் ஹாஜியார், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். சமீம், மாவட்ட செயலக தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம். பசீர், பிரதேச செயலக தலைமை முகாமையாளர் எம்.எல்.ஏ. மஜீத், கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல். சரீப், வங்கி முகாமையாளர் எஸ். ரவிச்சந்திரன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். ஐயூப்கான், பிரஜாசக்தி தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
2026 இரண்டாம் காலாண்டு உள்ளக கணக்காய்வு குழுக் கூட்டம் | 18 ஜூன் 2026
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டு உள்ளக கணக்காய்வு குழுக் கூட்டம் 18 ஜூன் 2026 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட கணக்காய்வு அத்தியட்சகர், மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், கணக்காய்வு ஐய வினாக்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டம் செயலக வேலைத்திட்டங்களின் நிதி ஒழுங்கு மற்றும் வினைத்திறனை உறுதிப்படுத்தும் நோக்கில் சிறப்பாக நடைபெற்றது.
சமூக பாதுகாப்புச் சபையின் தேசிய விருது — பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் கௌரவிப்பு | 24 ஜூன் 2026
இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதைப் பெற்ற வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திரு. எம்.பீ.எம். முபாறக் அவர்கள் 24 ஜூன் 2026 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக கௌரவிக்கப்பட்டார்.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையிலும், கிழக்கு மாகாண சமூக பாதுகாப்புச் சபையின் சிரேஸ்ட இணைப்பாளர் எஸ்.ரீ. சுதாகரன் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ். சசிகரன், மாவட்ட பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக கணக்காளர்கள் கலந்துகொண்டனர்.
திரு. முபாறக் அவர்கள் 2024 ஆம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய காலகட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்து, மக்களுக்கான சேவைகளை திறம்பட வழங்கியமைக்கான அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் பணியாற்றும் அவர்களுக்கு இவ்விருது கிடைத்தமை, அவரது அர்ப்பணிப்புமிக்க பொது சேவைக்கான மேலும் ஒரு சிறப்பான தேசிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு — 2026 | 18 ஜூன் 2026
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில் "பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு — 2026" இன்று (18) காலை 8.30 மணியளவில் தியாவட்டவான் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலய வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.எம். நியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் கலந்துகொண்டு சிறப்பித்தார். தியாவட்டவான் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலய அதிபர் ஏ.யு.எம். நளீம் ஸலாமி, பாலைநகர் ஹிஸ்புல்லா வித்தியாலய அதிபர் ஜஃபர்கான், மயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலய பிரதி அதிபர், பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திலீபா சிவரூபன், ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள மூன்று ஆரம்பப் பிரிவு பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையில் கயிறு இழுத்தல், பாம்பு அட்டை, கிளித்தட்டு, கடற்கரை விளையாட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாணவர்களிடையே உடல் ஆரோக்கியம், ஒழுக்கம், ஒத்துழைப்பு மற்றும் கலாசார மரபுகளைப் பேணும் உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்நிகழ்வில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கும் பாராட்டுகளும் பரிசில்களும் வழங்கப்பட்டு நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது.


















